தமிழ்நாடு

tamil nadu

பாலியல் குற்றச்சாட்டு குறித்து தவறான புகார் அளிக்க வேண்டாம் - அன்பில் மகேஷ்

By

Published : Nov 25, 2021, 1:18 PM IST

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ()

மாணவர்களின் எதிர்காலம் முக்கியம், பாலியல் குற்றச்சாட்டு குறித்து தவறான புகார் அளிக்க வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை:சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி பணிமனை இன்றும் (நவம்பர் 25), நாளையும் (நவம்பர் 26) நடைபெறுகிறது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அரசு, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 680 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

இதன் தொடங்க விழா நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய அன்பில் மகேஷ், "படிப்பைக் காட்டிலும் விவாதப் பொருளாக பாலியல் வன்முறை இப்போது மாறியுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோராக இருக்கின்றனர். பாலியல் வன்முறை குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் (1098, 14417) மட்டும் கொடுத்துவிட்டால் கடமை முடிந்தது என எண்ணாமல், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை, கோவை என எங்கு நடந்த செயலாக இருந்தாலும் குற்றம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்துப் பள்ளிகள், வகுப்பறைகள், புத்தகங்களின் முகப்பில் புகார் எண் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், எல்லா துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித் துறையின் மீது மிகுந்த அக்கறைகொண்டவர்" என்று தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலம் முக்கியம்

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளரிடம் பேசிய அவர், "பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுவருகிறது. பாலியல் வன்முறைக்கு எதிரான புகார் கொடுக்க ஏற்கனவே உதவி எண்கள் இருந்தபோதிலும், அது குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த நவம்பர் 19 அன்று திருச்சியில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆன்லைன் மூலமும் நடத்தப்படுகிறது. பள்ளி வளாகத்தில் இருக்கும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பாலியல் தொடர்பான புகார்கள் வரும்போது, உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் முக்கியம்; எனவே, தவறான புகார்கள் அளிக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பாடங்களை முழுவதும் புரியும்படி நடத்த வேண்டும் - கல்லூரிக் கல்வி இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details