தமிழ்நாடு

tamil nadu

போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

By

Published : Aug 5, 2022, 6:25 PM IST

போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், 'இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் பாதிப்புகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று முதற்கண் கேட்டுக்கொள்கிறேன்.

போதைப்பாதை அழிவுப்பாதை என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள். போதைப் பொருட்கள் அவர்களது சிந்தனையை அழித்துவிடுகிறது. வளர்ச்சியைத்தடுத்து விடுகிறது. எதிர்காலத்தைப் பாழாக்கி, அவர்களது குடும்பத்தையும் அழித்துவிடுகிறது. இது சமூகத்தின் - நாட்டின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கின்றது.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதனை யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும். அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது.

அதேநேரத்தில், போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அரசின் மிக முக்கியக்கடமையாக நான் நினைக்கிறேன். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

இதன் ஒருபகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் நாளை, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அன்றைய நாள், பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொலிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

அன்றைய நாள், தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது அரசியல் பிரச்னை அல்ல; நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்னை‌. குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்னை. எனவே, நீங்கள் இதில் உங்கள் பங்களிப்பினை வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ச்சியான பரப்புரைகளின் மூலமாகத்தான் போதைப்பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். போதைப்பாதை அழிவுப்பாதை என்பதை உணர்த்துவோம்! அதன் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்போம்’ இவ்வாறு முதலமைச்சர் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரூ.43.50 கோடி மதிப்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details