சென்னை: உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து இன்று (அக். 29) காலை சேலத்துக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை உள்பட 43 பயணிகள் பயணித்தனர். சென்னையில் இருந்து சேலம் நகருக்கு ஏற்கனவே ட்ரூஜெட் தனியார் பயணிகள் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது.
ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து காரணமாக சென்னை - சேலம் - சென்னை விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. அதன்பின்பு கரோனா வைரஸ் பாதிப்பு நீங்கி, மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் இயங்கத் தொடங்கின.
ஆனால் சென்னை - சேலம் - சென்னை விமான சேவைகள் மட்டும் மீண்டும் தொடங்கவில்லை. சென்னையில் இருந்து சேலத்திற்கு ஏற்கனவே விமான சேவையை இயக்கி வந்த ட்ரூஜெட் தனியார் விமான நிறுவனம், விமான சேவையை மீண்டும் தொடங்க முன்வரவில்லை. இதனால் சென்னை - சேலம் - சென்னை சேவைகள் இல்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை - சேலம் - சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்தது. அதன்படி இன்று (அக். 29) ஞாயிறு முதல் இந்த விமான சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் தினசரி சேவையாக தினமும் இயக்கப்படுகிறது.
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து இன்று காலை 11:20 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 12:30 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்றடைந்தது. அதன் பின்பு அதே விமானம் சேலத்தில் இருந்து பகல் 12:50 மணிக்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு பகல் 1:45 மணிக்கு சென்றது.