தமிழ்நாடு

tamil nadu

குடையை ரெடியா வையுங்க.. ஜன.27 முதல் 28 வரை மழைக்கு வாய்ப்பு!

By

Published : Jan 24, 2023, 1:33 PM IST

இன்னும் 3 தினங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வருகிற ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குதொடர்ச்சிமலை மாவட்டங்கள், தென்தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.24) இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து நாளை (ஜன.25) மற்றும் நாளை மறுநாள் (ஜன.26) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் வருகிற ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதேநேரம் இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் ஜனவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பனிமூட்டம் காரணமாக சிறுமலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details