தமிழ்நாடு

tamil nadu

DMK Files 2: ‘ஆளுநரிடம் வழங்கிய தகரப்பெட்டி’.. உள்ளே இருந்தது என்ன? - பாஜக மாநிலத் துணைத் தலைவர் விளக்கம்!

By

Published : Jul 26, 2023, 10:42 PM IST

தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் பாஜக மாநிலத் தலைவர் வழங்கிய திமுக ஃபைல்ஸ் பகுதி 2 என பெயரிடப்பட்டிருந்த தகரப்பெட்டிக்குள் இருந்தது என்ன? என்பது குறித்து பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், அதனுள் இருக்கும் ஆவணங்கள் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்

சென்னை:தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ரவியை சந்தித்தார். ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினரின் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், 5ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், “டாஸ்மாக் குறித்து அரசிடம் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. அதற்காக பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை ஒன்று தயார் செய்தோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை வாங்கவில்லை. ஆகவே, ஆளுநரிடம் கொடுத்தோம். தமிழ்நாட்டில் ஒன்பது அமைச்சர்களின் ஊழல் சொத்துகள், பினாமி சொத்து விவரங்கள் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஊழல் குறித்த விவரமும் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஆண்டுக்கு 3ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. சென்னை 1 எல்காட்டில் 95.4 விழுக்காடு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. கனகர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிறுவனங்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.
அதில் 2ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது'' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ''மதுவினால் ஏற்படும் தீமைகளை கண்டுகொள்வதில்லை, மதுவினால் சமூகப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் கவலை கொள்வதில்லை. மதுவிலிருந்து திருந்தியவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் இல்லை. இது போன்று எதுவும் இருக்காது. ஆனால், அந்த துறைக்கு ஒரு அமைச்சர் இருப்பார்‌. திமுக-வின் குறிக்கோள் மது விற்பனையை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஆனால், பெயரளவுக்குத்தான் மதுவிலக்குத் துறை என்று உள்ளது.

அதனால் தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் நாங்கள் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தோம். அந்த வெள்ளை அறிக்கையில் டாஸ்மாக் கடைகளை எப்படி குறைப்பது மற்றும் அந்த வருவாயினை எப்படி ஈடு கட்டுவது உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் ஊழல் பட்டியலில் ஒன்பது அமைச்சர்களின் பினாமி சொத்துகள், ஊழல் பட்டியல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் ஊழல் பட்டியலில் 5ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை ஊழல் செய்யப்பட்டது பற்றி தெளிவாக கூறுகிறது.

சென்னையில் உள்ள டைட்டில் பார்க் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தெரிந்த நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிறுவனம் முதலில் தொடங்கும் பொழுது அரசாங்க நிறுவனமாக தொடங்கப்பட்டது. 2006-2011ஆம் ஆண்டில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக அரசு, இந்த டைட்டில் பார்க் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். தற்போது 95.6 விழுக்காடு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் 3ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

அரசுப் பேருந்துகளில் இரவு நேரங்களில் தெரிவதற்கு ரெஃப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்ட ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அந்த தனியார் நிறுவனம் மூலம் 2ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. வழக்கு ஒன்றுக்கு சட்டப்படியான நடவடிக்கை எடுக்காததால் 600 கோடி ரூபாய் ஊழல் ஏற்பட்டது. மொத்தம் 5ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக மூன்று குற்றச்சாட்டுகளை வைத்து ஆளுநரிடம் ஊழல் பட்டியலை சமர்ப்பித்துள்ளோம். இந்த இரண்டாம் ஊழல் பெட்டியில் ஆயிரம் பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சமூக மாற்றத்திற்கான ஒரு வெள்ளை அறிக்கை தான் ஆளுநரிடம் சமர்ப்பித்தோம்” என்றார்.

இதையும் படிங்க:ட்விட்டரில் மல்லுக்கட்டும் பாஜக - ஆம் ஆத்மி! பேசு பொருளாக மாறிய ஆம் ஆத்மி எம்பியின் புகைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details