தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலை பல்கலை. அதிகாரிகளை பதவியிறக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்

By

Published : May 8, 2023, 7:21 PM IST

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை, ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த பல்கலைக்கழக உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Annamalai univeristy
அண்ணாமலை பல்கலை

சென்னை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வந்த 202 கல்வி மையங்களை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நிர்வாகப் பிரச்னை காரணமாக பல்கலைக்கழகத்தை அரசே எடுத்தது. அதன்பின் கல்வி மையங்களின் எண்ணிக்கை 59ஆக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகள் பலர் உபரி அதிகாரிகளாக அரசால் அறிவிக்கப்பட்டனர். அவர்களில் பலரை உதவி பிரிவு அதிகாரியாக பதவி இறக்கம் செய்தும், ஊதியத்தைக் குறைத்தும் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், அவர்களை வேளாண் துறைக்கும், கல்லூரி கல்வித் துறைக்கும் அயல் பணியாக மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதேபோல 350 சிறப்பு அதிகாரிகளை, அரசு கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக நியமித்ததுடன், ஊதியத்தையும் குறைத்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணமூர்த்தி என்பவர் உட்பட 115 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான மனுக்களில் "எங்களை ஆய்வக உதவியாளர்களாக நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தினர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, "முதுகலை பட்டம் பெற்ற எங்களை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் ஆய்வக உதவியாளர்களாக நியமித்தது சட்டவிரோதமானது. ஏற்கனவே பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது" என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரர்களை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சென்னை புதிய விமான முனையம் முழு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

ABOUT THE AUTHOR

...view details