ETV Bharat / state

சென்னை புதிய விமான முனையம் முழு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

author img

By

Published : May 8, 2023, 6:37 PM IST

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையத்தில், வரும் ஜூன் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக விமான சேவை தொடங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

airport
விமான நிலையம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறந்து வைத்தார். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தை ஆண்டுதோறும் 23 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் நிலையில், இனி 30 மில்லியன் பேர் பயன்படுத்துவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய முனையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பயணிகள் பாதுகாப்புச் சோதனைக்காக 100 கவுன்டர்கள், குடியுரிமை சோதனைக்கு 108 கவுன்டர்கள், பயணிகளின் உடமைகள் வரும் கன்வேயர் பெல்ட்கள் 6, 17 அதிநவீன லிஃப்ட்டுகள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகளின் உடைமைகள் பரிசோதனைக்காக 3 அதிநவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விமான நிலைய ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம், டாக்ஸி வழித்தடம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு, ஓடுபாதையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் முதல் சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்கியது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 146 பயணிகளுடன் சென்னை வந்த யூ.எஸ். பங்களா ஏர்லைன்ஸ் விமானம் முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கியது. அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் மேலும் சில பணிகள் செய்யப்பட்டன. அதன் பின்பு, இந்த மாதம் 3ஆம் தேதி 3 விமானங்கள் சோதனை அடிப்படையில் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து சிங்கப்பூர், குவைத் செல்லும் விமானங்களும், சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானமும் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மேலும் சில விமானங்கள் புதிய முனையத்தில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டன. ஆனால், சிறிய ரக விமானங்களான ஏர்பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 ஆகிய விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன.

அந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது நடுத்தர மற்றும் பெரிய ரக விமானங்களும் வரத் தொடங்கியுள்ளன. குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும் செல்லும் விமானங்கள் புதிய முனையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த சோதனை ஓட்டம், தற்போது நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் நடக்கிறது. அதன்படி நேற்று அதிகாலை 1:15 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை புதிய முனையத்திற்குச் சோதனை அடிப்படையில் ஜாஜுரா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் அதே விமானம், அதிகாலை 3:30 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் புறப்பட்டுச் சென்றது.

இதேபோல் இம்மாதம் மூன்றாவது வாரம் வரையில், சோதனை அடிப்படையில் பல்வேறு ரக விமானங்கள் புதிய முனையத்திற்கு வர உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் புதிய முனையத்தில் சோதனை ஓட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஒருங்கிணைந்த முனையத்தில் விமானங்களின் முழு அளவிலான சர்வதேச வருகை, புறப்பாடு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரம்.. விவசாயிகள் போராட்டம்.. முதலமைச்சரிடம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.