தமிழ்நாடு

tamil nadu

எடப்பாடி பழனிசாமியின் வங்கிக்கணக்கு குறித்து விசாரணை - காவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

By

Published : Jun 26, 2023, 12:54 PM IST

Updated : Jun 26, 2023, 2:24 PM IST

வழக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய காவலர்கள் விசாரணை மேற்கொண்டதால், எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

‘வழக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்ற  உத்தரவை மீறிய காவலர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு!
‘வழக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்ற உத்தரவை மீறிய காவலர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு!

சென்னை:கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யும்படியும் தெரிவித்திருந்தது. இதுகுறித்து கடந்த மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல் துறைக்கு அறிவுறுத்தியது.

இந்த வழக்கைத் தாக்கல் செய்தபிறகு அவசர கதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணயை ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்தது, உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தான் படித்த கல்லூரி மற்றும் கணக்கு வைத்துள்ள வங்கி ஆகியவற்றில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதையும் படிங்க:"போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - டிஜிபி சைலேந்திரபாபு

சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்தியன் வங்கி கிளையில் கணக்கு குறித்த விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாகக் கூறி, சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஈரோட்டில் 1973-76ம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி படித்த ஸ்ரீ வாசவி கல்லூரிக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கைப் பெரிது படுத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்வது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால், இரு அதிகாரிகளையும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜூலை 7ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இரு காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் - நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்!

Last Updated :Jun 26, 2023, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details