தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

By

Published : Jul 20, 2023, 5:09 PM IST

சென்னையில் நகைப் பட்டறையில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்களை குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னையில் உள்ள தொழிற்சாலை, மற்றும் தனியார் நிறுவனங்களில் சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தியுள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த சோதனையானது வாரம்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்களை, பணியமர்த்தியுள்ளதாக குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் பிரிவு கூடுதல் செயலாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனை அடுத்து, சென்னை மாவட்ட குழந்தைகள் நல தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ரெட்டி ராமன் தெருவில் உள்ள நகைப் பட்டறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் நகைப்பட்டறையில் பணியாற்றி வந்த 7 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டனர்.

மேலும் நகைப்பட்டறை உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 7000 முதல் 10ஆயிரம் வரை, அவருடைய பெற்றோர்களுக்கு முன்பணம் கொடுத்து சிறுவர்களை சென்னை அழைத்து வந்து 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை குழந்தைகளை வேளை வாங்கி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் குழந்தைகள் தங்கும் இடம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது எனவும், கழிவறைகள் பொதுக் கழிவறைகளைவிட மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் குழந்தைகள் நல தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மீட்கப்பட்ட 12 குழந்தைகளை ராயபுரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள் அவர்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து அனைவரையும் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் துரைராஜ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தொழிலாளர் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், வேலைக்கு குழந்தைகளை அழைத்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாதல் சமந்தா (38) என்பவர், மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details