ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!

author img

By

Published : Jul 20, 2023, 2:10 PM IST

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

bus stop encroachment removed
பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் விளக்கு பேருந்து நிறுத்தத்தை பல ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வந்துள்ளனர். இதனால் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மீனாட்சிபுரம் விளக்கு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் எங்கே இருக்கிறது என தேடி வந்தனர். கிணற்றைக் காணவில்லை என்ற வடிவேலு பட காமெடி பாணியில் பேருந்து நிறுத்தம் தெரியாத அளவிற்கு தனியார் உணவகமாக அது மாறி இருந்தது. தனிப்பட்ட நபர்கள் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றி விளம்பரப் பலகையால் பேருந்து நிலையம் சுவடே தெரியாத அளவிற்கு மாற்றி அமைத்து இருந்தனர்.

மேலும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தம் எங்கே இருக்கிறது என தெரியாமல் முன்னும், பின்னும் பேருந்தை நிறுத்துவதால் பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

அதேநேரம், அந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளின் நிழற்குடையை மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதனிடையே, இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்தில் செய்தியாக பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்று (ஜூலை 20) சம்பவ இடத்திற்கு போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அலுவலர்கள், போடி நகர போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும், பலகைகளும் அகற்றப்பட்டன.

பின்னர், சிறிது நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதாகக் கூறி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றாமல் பெயரளவிற்கு மட்டும் அதிகாரிகள் வந்து பார்த்துச் சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பேருந்து நிலையத்தில் ஏற்பட்டிருக்கின்ற சேதங்களை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Saidapet: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரி வெட்டி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.