தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வு -  மாணவி தற்கொலை முயற்சி

By

Published : Sep 16, 2021, 5:04 PM IST

மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்துத் தற்கொலை முயற்சி செய்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு:ஊரப்பாக்கம் அடுத்த அய்யஞ்சேரியை சேர்ந்தவர்கள் கமலநாதன், ஷிபா தம்பதி. இவர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். கமலநாதன் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது மகள் அனுசுயா (17), அதே பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். இந்நிலையில், இன்று (செப்.16) வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல

அந்த மாணவி, கடுமையான தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் சென்று மாணவியின் நிலை குறித்து விசாரணை மேற்கொண்டார்.

சமீபத்தில் எழுதிய நீட் தேர்வில் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தின் காரணமாக, மாணவி தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. பெற்றோர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தாலும், அவர்களது மகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கூழையூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் நீட் தேர்வில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல, அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி மகள் கனிமொழி தனது மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா (17) நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துக்கொண்டார்.

நீட் தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மாணவ மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நீட் மரணம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details