தமிழ்நாடு

tamil nadu

சுயேச்சை வேட்பாளரின் சின்னத்தில் குளறுபடி - ஜெயங்கொண்டத்தில் மறுவாக்குப்பதிவு

By

Published : Feb 21, 2022, 1:17 PM IST

அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மறு வாக்குப்பதிவு..
அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மறு வாக்குப்பதிவு..

ஜெயங்கொண்டம் நகராட்சி 16ஆவது வார்டில் சுயேட்சை வேட்பாளரின் சின்னத்தில் குளறுபடி காரணமாக மீண்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அரியலூர்:தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19ஆம் தேதி நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஐந்து வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் இன்று (பிப். 21) மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண்.16-க்கான, வாக்குச்சாவடி 16 (ஆண்), வாக்குச்சாவடி 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான சுயேச்சை வேட்பாளர் விஜயலட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மறைதிருக்கி (ஸ்பேனர்)-க்கு பதிலாக திருகு ஆணி (ஸ்குரு) எனத் தவறுதலாகப் பதியப்பட்டு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, வேட்பாளர் விஜயலட்சுமி தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை அளித்தார். இதன்பேரில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தவறு நடந்த இரண்டு வாக்குச்சாவடிகளில் இன்று(பிப்ரவரி 21) மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த மறுவாக்குப்பதிவில் ஜெயங்கொண்டம் நகராட்சி 16ஆவது வார்டில் பிரதான கட்சிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கை சின்னத்திலும், அதிமுக வேட்பாளராக மலர்விழி இரட்டை இலை சின்னத்திலும், பாமக வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும், அமமுக வேட்பாளராக ரோஸ்மா பிரஷர் குக்கர் சின்னத்திலும், சுயேச்சை வேட்பாளர்களாக விஜயலட்சுமி மறைமுருக்கி (ஸ்பேனர்) சின்னத்திலும், சுந்தராபாய் தீப்பெட்டி சின்னத்திலும் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மறுவாக்குப்பதிவு

ஸ்டேட்பேங்க் காலணி, சீனிவாசாநகர், இந்திராநகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம் ரோடு, கல்வி கிராமம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 16ஆவது வார்டில் 1,640 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. (மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது).

பள்ளிகளுக்கு விடுமுறை

வாக்குப்பதிவின்போது அழியாத மை இடது கை நடுவிரலின் மீது வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 16ஆவது வார்டில் உள்ள அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்கும் வகையில் இன்று விடுமுறை என மாவட்ட கலெக்டர் பெ. ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 16ஆவது வார்டிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குச் சரிபார்க்கும் பணி காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதன்பின்னர் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டு ஒவ்வொருவராக வாக்களித்து வருகின்றனர்.

வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை

மறுவாக்குப்பதிவு நடைபெறும் பணிகளை ஜெயங்கொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சுபாஷினி மற்றும் பாதுகாப்புப் பணிகளை துணை காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமையில் காவல் துறையினர் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16ஆவது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் (பிப். 19) 1,034 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நாளை 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details