தமிழ்நாடு

tamil nadu

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா? விண்ணப்பிக்க அழைப்பு

By

Published : Mar 22, 2023, 5:14 PM IST

ராணுவக்கல்லூரியில் சேர அழைப்பு
ராணுவக்கல்லூரியில் சேர அழைப்பு ()

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு முறைகளில் நடத்தப்படுகிறது.

எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்களை கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியவற்றுக்கு ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை ”கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003” என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணையவழி செலுத்தி (பொது பிரிவினர் ரூ.600/- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555/-) பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதார்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2024 அன்று 11 1/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-01-2011-க்கு முன்னதாகவும் 01-07-2012க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் போது 01-01-2024-ல் அங்கீகரிக்கப் பெற்ற (Recognized School) பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், இத்தேர்வு குறித்த மற்ற விவரங்களை ராஷ்ட்ரிய இந்திய கல்லூரியின் இணையதளத்தில் www.rimc.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 6 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details