தமிழ்நாடு

tamil nadu

குபீர் என்று பற்றி எரிந்த ஸ்டவ்.. வசந்த் அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

By

Published : Feb 15, 2023, 9:29 PM IST

Etv Bharat

புதிதாக வாங்கிய ஸ்டவ் அடுப்பு குபீர் என்று தீப்பிடித்து எரிந்ததால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வசந்த் அண்ட் கோ உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்:புத்தம் புதிய ஸ்டவ் அடுப்பு வாங்கிய அன்றே குபீர் என்று தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வசந்த் அண்ட் கோ நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனம்பாக்கம் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் குமாரசாமி. இவர் சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'கடந்த 17.03.2017 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் சன் ஃபிளேம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று பர்னர்கள் கொண்ட கண்ணாடி மூடியுடன் கூடிய கேஸ் ஸ்டவ் ஒன்றை ரூ.13 ஆயிரத்து 500க்கு வாங்கினேன்.

இந்த கேஸ் ஸ்டவ்வை சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் சர்வேஷ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சர்வீஸ் பிரதிநிதிகள் 20ஆம் தேதி அன்று எங்கள் வீட்டில் பொருத்தினர். 21ஆம் தேதி காலையில் ஸ்டவ்வை பற்ற வைத்த போது, குபீர் என்று தீப்பிடித்து சிலிண்டர் வரை தீ சென்றது. உடனடியாக ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு இதுகுறித்து சர்வேஷ் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து பரிசோதனை செய்துவிட்டு சரியாக உள்ளது என்று கூறிவிட்டுச் சென்றனர்.

21ஆம் தேதி காலையில் மீண்டும் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது, திரும்பவும் விபத்து ஏற்பட்டது. எனவே, பழுதான நிலையில் இருக்கும் இந்த ஸ்டவ்வால் எங்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. அடுப்பை மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், டியூப் தான் எரிந்து இருக்கிறது என்று கூறிய சர்வேஷ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சரி செய்து தருவதாக கூறியது.

எங்களுக்கு ஸ்டவ் அடுப்பை மாற்றித்தர வேண்டும் என்று பலமுறை சன் பிளேம் நிறுவனம், வசந்த் அண்ட் கோ நிறுவனம், சர்வேஷ் என்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகிய மூவருக்கும் தகவல் கொடுத்தோம். ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டவ் அடுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். புதிய ஸ்டவ்வுக்கு நான் செலுத்திய ரூ.13 ஆயிரத்து 500-ஐ திருப்பி வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கானது சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (பிப்.15) அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதி ராம்ராஜ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில், 'இந்த வழக்கில் ஸ்டவ் அடுப்பை தயாரித்த சன் ஃபிளேம் நிறுவனம், அடுப்பை விற்பனை செய்த வசந்த் அண்ட் கோ நிறுவனம், அடுப்பை சர்வீஸ் செய்த சர்வேஷ் என்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகிய மூன்று பேருமே சேவை குறைபாடு புரிந்துள்ளனர்.

எனவே, இந்த மூன்று நிறுவனங்களும் அடுப்புக்காக பெறப்பட்ட 13 ஆயிரத்து 500 ரூபாயை 9% வட்டியுடன் மனுதாரருக்கு திருப்பி வழங்க வேண்டும். அத்தோடு, மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்' என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பிரபாகரன் குறித்த கேள்வி - எரிச்சலான அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details

தொடர்புடைய கட்டுரைகள்