இன்டர்கான்டினெண்ட்டல் கால்பந்து தொடர் அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. அதில், இந்தியா, வட கொரியா, சிரியா, தஜிகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் விளையாடிவருகின்றன. நேற்று நடைபெற்ற இந்தத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, சிரியாவை எதிர்கொண்டது.
இந்தத் தொடரில் தஜிகிஸ்தான், வட கொரியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோல்வி அடைந்ததால், இப்போட்டியில் ஆறுதல் வெற்றிபெற வேண்டிய முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி.
இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கார்னர் கிக் வழங்கப்பட்டது. இந்திய வீரர் அனிருத் தாப்பா தந்த க்ராஸை, 18 வயது வீரரான நரேந்திர கெலாட் ஹெட்டர் முறையில் கோலாக மாற்றி அசத்தினார். இதன்மூலம், சர்வதேச கால்பந்து அரங்கில் இளம் வயதில் கோல் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, இச்சாதனையை மற்றொரு இந்திய வீரரான ஜெரி தனது 16ஆவது வயதில் படைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சிரியா அணிக்கு 78ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டதால், அதை ஃபிராஸ் கோலாக மாற்றினார். இதனால், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதன்மூலம், இந்திய அணி குரூப் பிரிவில் இரண்டு தோல்வி, ஒரு டிரா என ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தை பிடித்தது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் இறுதி போட்டியில், தஜிகிஸ்தான் - வடகொரியா அணிகள் மோத இருக்கின்றன.