அபுதாபி: ஐசிசி 7ஆவது டி20 உலகக்கோப்பைத் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் கடந்த அக். 17ஆம் தேதி தொடங்கின. இந்தத் தொடர் ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறுகின்றன. தகுதிச்சுற்றுப் போட்டிகள் வரும் நாளையுடன் (அக். 22) நிறைவடையும் நிலையில், அடுத்த 'சூப்பர் - 12' சுற்று நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்நிலையில், நேற்று (அக். 20) அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து - நமிபியா ('ஏ' பிரிவு) அணிகள் மோதின. போட்டியில், டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
நமீபியா முதல் வெற்றி
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டவுட் 70 (56) ரன்களை குவித்தார். நமீபியா பந்துவீச்சில் ஜன் ஃப்ரைலிங்க் இரண்டு விக்கெட்டுகளையும், டேவிட் வைஸ் 1 விக்கெட்டையும் விழ்த்தினர்.
இதன்பிறகு, களமிறங்கிய நமீபியா அணி 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. இது நமீபியா அணி ஐசிசி தொடரில் பெறும் முதல் வெற்றியாகும்.
நமீபியா அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வைஸ் 66 ரன்களை [44 பந்துகள்; 4 - பவுண்டரி; 5 - சிக்ஸர் குவித்தார். டேவிட் வைஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு போட்டி
இதையடுத்து, அதே மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு மைதானத்தில் இலங்கை - அயர்லாந்து ('ஏ' பிரிவு) அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணி தொடக்க வீரர்கள் விரைவில் வெளியேறிய நிலையில், ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஹசரங்கா அணியை வலுவான நிலைக்கு அழைத்துசென்றார்.
ஆட்டநாயகன் ஹசராங்கா
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிஷாங்கா 61 (47) ரன்களையும், ஹசரங்கா 71 (47) ரன்களை குவித்தனர்.
அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின்னர், களமிறங்கிய அயர்லாந்து 18.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இலங்கை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹசரங்கா தேர்வுசெய்யப்பட்டார்.
'ஏ' - பிரிவு நிலவரம்
இதன்மூலம், தகுதிச்சுற்றின் 'ஏ' பிரிவில் இலங்கை இரண்டு போட்டிகளை வென்று முதல் இடத்தில் உள்ளது. அயர்லாந்து, நமீபியா அணி தலா ஒரு வெற்றியுடன் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன. நெதர்லாந்து இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் உள்ளது.
சூப்பர் - 12 சுற்றுக்கு இலங்கை அணி ஏறத்தாழ தகுதிப்பெற்றுவிட்ட நிலையில், 'ஏ' பிரிவில் இருந்த வேறு எந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது நாளை நடைபெறும் போட்டிகள் உறுதிசெய்யும்.
இன்றையப் போட்டிகள்
டி20 உலகக்கோப்பை தொடரில் 'பி'- பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் மோதும் போட்டிகள் இன்று (அக். 21) நடைபெறுகின்றன. வங்கதேசம் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதும் போட்டி மாலை 3.30 மணிக்கும், ஸ்காட்லாந்து - ஓமன் அணிகள் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். இந்த இரு போட்டிகளில் ஓமன் அல்-மீரட் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
'பி'- பிரிவு போட்டிகள் இன்றுடன் முடிவதால், 'பி'- பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் இரண்டு அணிகள் என்பது இன்று தெரிந்துவிடும். ஸ்காட்லாந்து அணி இரண்டு போட்டிகளையும் வென்று முதல் இடத்திலும் உள்ளது.
ஓமன், வங்கதேசம் அணிகள் தலா ஒரு வெற்றியுடன் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் உள்ளன. பப்புவா நியூ கினியா இரண்டு தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா