தமிழ்நாடு

tamil nadu

டி20 போட்டியில் ரோகித், கோலி? - அணியில் நிகழப்போகும் மாற்றம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 4:03 PM IST

Rohit and Virat: டி20 போட்டிகளில் விளையாட விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பிசிசிஐயிடம் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததோடு, கேப் டவுன் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.

இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை இந்திய அணி சமன் செய்ததை தொடர்ந்து, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. தோனிக்கு பின்பு தென் ஆப்பிரிக்காவில் ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், இந்திய அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது.

இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் வரும் 11, 14 மற்றும் 17ஆம் தேதிகளில் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற உள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு இன்று (ஜன.05) தேர்வுக்குழு கூடுகிறது. காணொலி மூலம் கூடும் இந்த குழுவில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கார், சலில் அன்கோலா, ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதா பானர்ஜி மற்றும் எஸ் ஷரத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், டி20 போட்டிகளில் விளையாட முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பிசிசிஐயிடம் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்வதில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு குழப்பத்தில் உள்ளது.

ஏனென்றால், டி20 போட்டிகளுக்கு தலைமை தாங்கி வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இவர்கள் இருவரும் அணிக்கு திரும்பாத பட்சத்தில் ரோகித் சர்மா அணிக்கு திரும்பும் பட்சத்தில், ரோகித் சர்மாவே அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது என எதிர்பாக்கப்படுகிறது.

நடப்பாண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது. மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு, இவர்கள் இருவரும் டி20 போட்டிகள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எனது தொலைந்துபோன பச்சை தொப்பி கிடைத்துவிட்டது.. டேவிட் வார்னர் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details