தமிழ்நாடு

tamil nadu

கடைசிவரை ஆர்சிபியில்தான் வேட்டையும் வாழ்க்கையும் - கோலி

By

Published : Oct 12, 2021, 10:37 AM IST

கோலி, விராட் கோலி, VIRAT KHOLI, VIRAT KHOLI AGGRESSION, VIRAT AGRESSION, VIRAT ANGRY
கோலி

ஐபிஎல் தொடரில் விளையாடும் கடைசிப்போட்டி வரை பெங்களூரு அணிக்காக மட்டும்தான் விளையாடுவேன் என்று அந்த அணி கேப்டன் கோலி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சார்ஜா: ஐபிஎல் 2021 தொடரில் நேற்று (அக். 11) நடைபெற்ற பிளே-ஆஃப் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இதன்மூலம், பெங்களூரு அணி தொடரைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், கொல்கத்தா அணி நாளை (அக். 13) நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் சுற்றில் டெல்லி அணியுடன் மோதுகிறது.

ஆட்டத்தை மாற்றிய நரைன்

கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பந்துவீச்சில் வீசிய நான்கு ஓவர்களில் தலா ஒரு விக்கெட் என நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 24 ரன்களை மட்டும் கொடுத்தார்.

பேட்டிங்கிலும், கொல்கத்தா அணி திணறிக்கொண்டிருந்த சமயத்தில் டேனியல் கிறிஸ்டியன் ஓவரில் மூன்று சிக்சர்களை விளாசி அதிரடிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

120% பங்களிப்பு

இந்நிலையில், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி இந்தத் தொடரோடு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்தப் போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் கேப்டனாக இது அவருக்கு கடைசிப் போட்டியாக அமைந்தது.

போட்டிக்குப் பிறகு விராட் கோலி கேப்டன் பொறுப்பு குறித்து பேசுகையில், "எங்கள் அணியில் இளைஞர்கள் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையாகவும் விளையாடும் சூழலை உருவாக்க, என்னால் முடிந்தளவு சிறப்பான முயற்சியை மேற்கொண்டேன். இந்திய அணியிலும் இதைத்தான் நான் செய்தேன்.

என்னால் முடிந்தளவு சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்தேன். அதற்குப் பலன் கிடைத்ததோ இல்லையோ, கேப்டனாகத் தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு எனது 120 விழுக்காடு பங்களிப்பைக் கொடுத்தேன்.

இதன்பின்னர், ஒரு வீரராகவும் இதேபோன்றுதான் விளையாடுவேன். அணியில் மாற்றத்தைக் கொண்டுவரவும், அணியின் அமைப்பைச் சீரமைக்கவும் இதுவே சிறந்தத் தருணம்" என்றார்.

ஆர்சிபி மட்டும்தான்

தொடர்ந்து பெங்களூரு அணிக்காக விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக, நான் வேறு அணியில் விளையாடுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிற விஷயங்களைவிட எனக்கு உண்மையே முக்கியம். எனது கடைசி ஐபிஎல் போட்டிவரை ஆர்சிபி அணிக்காகத்தான் விளையாடுவேன்" என உறுதிபட பதிலளித்தார்.

விராட் கோலி, 2013ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றார். இதுவரை 140 போட்டிகளில் விராட் கோலி தலைமையில், பெங்களூரு அணி 66இல் வெற்றியும், 70 இல் தோல்வியும் அடைந்துள்ளது. நான்கு போட்டிகளுக்கு முடிவில்லை.

விராட் கோலி தலைமையில் பெங்களூரு கோப்பையை வென்றதில்லை. 2016ஆம் ஆண்டில் மட்டும் பெங்களூரு இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனியின் வெறித்தனமான ரசிகர் கோலி செய்த செயல்... என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details