சார்ஜா: கரோனா காரணமாகப் பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.
இந்நிலையில், 49ஆவது லீக் ஆட்டத்தில், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேற்று மோதின.
தொடரும் சொதப்பல்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 26 (21) ரன்களையும், அப்துல் சதம் 25 (18) ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண், செலுத்தி, மவி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கொல்கத்தா கெத்து
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு கொல்கத்தா அணி களமிறங்கியது.
எளிதான இலக்கு என்றாலும், கொல்கத்தா அணி நிதானமாக விளையாடியது. இதனால், 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.
ஹைதராபாத் அணி ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வெற்றியுடன் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா அணிக்கு 2 போட்டிகள் மீதம் உள்ளதால் பிளே-ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முதலிடம் யாருக்கு?
ஐபிஎல் தொடரில் இன்று (அக். 4) நடைபெறும் லீக் போட்டியில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாமிடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
இதையும் படிங்க:IPL 2021: பிளே-ஆஃப் சுற்றில் பெங்களூரு; பாவம் பஞ்சாப்