ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், சென்னை அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
152 ரன் இலக்குடன் ஆடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது, பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை மிட்சல் சான்ட்னர் எதிர்கொண்டார். பந்து சான்ட்னரின் இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வீசப்பட்டதால், நடுவர் முதலில் நோபால் என்று அறிவித்து பின் திரும்பப் பெற்றுக் கொண்டார். நடுவரின் இதுபோன்ற அலட்சியத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த தோனி, களத்தில் புகுந்து நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஆட்டத்தின் இக்கட்டான தருணத்திலும் பெரும்பாலான நேரங்களில் மிகவும் கூலாக இருக்கும் தோனி, இம்முறை அதை மீறியது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. மேலும் அவரது நடத்தைக் குறித்து பல்வேறு வீரர்கள் விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,
கிரிக்கெட் என்ற விளையாட்டில் விதிமுறைகளை மீறி வீரர்கள் நடந்துகொண்டால், அது கிரிக்கெட்டு என்னும் விளையாட்டிற்கான மரியாதையை சிதைப்பதாகும். கிரிக்கெட் விளையாட்டை விட பெரியவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
மேலும், நடுவருடன் தோனி வாதாடியது முற்றிலும் தவறு. ஆனால், ஊடகங்கள் ஏன் அவரது தவற்றை சுட்டிக்காட்டவில்லை எனத் தெரியவில்லை. விதிமுறையை மீறி அவர் நடந்துகொண்டதால் வெறும் 50 விழுக்காடு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என விமர்சித்தார்.