தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் திகழ்பவர் குயின்டன் டி காக். கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பதவியிலிருந்து டூ பிளஸிஸ் விலகியதையடுத்து, அந்த அணியின் கேப்டனாக குயின்டன் டி காக் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பணிச்சுமை மற்றும் மனச்சோர்வு ஆகிய காரணங்களினால் சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆண்ட்ரூ ப்ரீட்ஸ்கே (Andrew Breetzke) கூறுகையில், “மனச்சோர்வு காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குயின்டன் டி காக், சிறிது காலம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளார். இச்சூழலில் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அவருக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.