தமிழ்நாடு

tamil nadu

லாபம்: பொதுவுடைமைச் சமுதாயம் தொலைந்து போகவில்ல...

By

Published : Sep 12, 2021, 4:13 PM IST

laabam movies

‘லாபம்’ திரைப்படத்தை பார்க்கும் முன்பு ஜனநாயகம் எனும் பெயரில் மக்கள் மீது நிகழ்த்தப்படும் மறைமுக வன்முறை குறித்த புரிதல் நமக்கு அவசியமாகிறது. உலகமயமாதல் குறித்த புரிதல் வந்த பின்பு ‘கற்றது தமிழ்’ படத்தை பலரும் கொண்டாடியதுபோல், இத்திரைப்படமும் மக்களால் கொண்டாடப்படும். ஜனநாதன் தனது கடைசி படத்திலும் உழைக்கும் மக்களின் குரலாகவே ஒலித்திருக்கிறார்.

சென்னை: மக்கள் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், நிதிஷ் வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘லாபம்’.

ஜனநாதன் மறைவுக்கு பின் வெளியான திரைப்படம் என்பதால், படத்தின் மீது வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு முடிந்த அளவு படம் உண்மை செய்திருக்கிறது.

சிவப்பு சிந்தனைக்காரர் ஜனநாதன், தொடர்ந்து தன் திரைப்படங்கள் வாயிலாக கம்யூனிச சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். திரைப்படம் எனும் ஊடகத்தை உழைக்கும் மக்களின் குரலை ஒலிக்கச் செய்ய பயன்படுத்திக் கொண்டவர். ‘லாபம்’ படம் பிரசார தொனியில் இருக்கிறது; திரைமொழி பெரிதாக இல்லை என்பது பலருக்கு பிரச்னையாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன. வெகு சில படங்கள் மட்டுமே மக்களின் சிந்தனையை செழுமைப்படுத்தக்கூடிய படங்களாக இருக்கும். அந்த வகையில் ஜனநாதனின் ‘லாபம்’ திரைப்படத்தை, மக்களின் சிந்தனையை செழுமைப்படுத்தக்கூடிய படமாகவே பார்க்க முடிகிறது.

கூட்டுப்பண்ணை திட்டம், ஆடு, கோழி வளர்ப்பு என தற்சார்பு பொருளாதாரத்தின் அவசியம் குறித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் இயற்கை வள சுரண்டல் குறித்தும் இந்தப் படம் தெளிவான பார்வையை முன் வைக்கிறது.

பொதுவுடைமை சித்தாந்தவாதி தோழர் பி. சீனிவாச ராவ் வாழ்க்கை வரலாற்றை தொட்டு எடுக்கப்பட்ட படமாக இது இருக்கிறது. தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் எழுச்சி முதலாளித்துவ கும்பலுக்கு என்ன மாதிரியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்பதை இப்படம் எடுத்துரைக்கிறது.

பி. சீனிவாச ராவ்

தமிழ் படங்கள் எல்லாம் உலக சினிமா ரேஞ்சில் இருக்க வேண்டும் என தமிழ் சினிமாவை முன்னேற்றத் துடிக்கும் திரைப்பட விமர்சகர்கள் சிலர், படம் திராபை என விமர்சித்து வருகிறார்கள்.

கம்யூனிச சித்தாந்தத்தை பேசுவதாலேயே ஒரு படம் நல்ல படம் ஆகிவிடுமா; திரைப்படம் என்பது என்னவென்றால் என ஆரம்பித்து வகுப்பெடுக்க தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் திருநங்கைகளை, பெண்களை, மக்கள் போராளிகளை, ஒடுக்கப்படும் மக்களை எல்லாம் இழிவாக சித்தரித்து படம் வந்தபோது அதை ‘மௌன ராகம்’ மோகன் போல் கடந்தவர்கள் இவர்கள்.

”இப்பல்லாம் படங்கள் முன்ன மாதிரி ஒழுங்கா ஓடுறதில்லைனு சொல்றாங்க. காரணம் என்னனா, படம் பார்க்குறவன விட நடிக்கிறவன் அதிகமாகிட்டான்” என காமெடி மன்னன் கவுண்டமணி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

தமிழ் சமூகத்தில் இப்பலாம் விமர்சகர்கள் அதிகமாகிட்டாங்க. விமர்சனம் வைப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும்; என்ன படத்துல என் மச்சான் பேர் வரல; இதெல்லாம் ஒரு படமா எனும் ரேஞ்சில் விமர்சனம் வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கரோனா சூழலில் பயோ-வார் எனும் உயிரியல் போர்முறை குறித்து பலரும் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதுகுறித்து 15 ஆண்டுகள் முன்பே தன் படத்தின் வாயிலாக பேசியவர் ஜனநாதன். படத்தில் விமர்சனமாக வைக்கப்படும் விஜய் சேதுபதியின் நடிப்பு, திரைமொழி எல்லாம் கடந்து இந்தப் படம் பேசும் விஷயம்தான் பலருக்கு பிரச்னையாக இருக்கிறது.


‘லாபம்’ திரைப்படத்தை பார்க்கும் முன்பு ஜனநாயகம் எனும் பெயரில் மக்கள் மீது நிகழ்த்தப்படும் மறைமுக வன்முறை குறித்த புரிதல் நமக்கு அவசியமாகிறது. உலகமயமாதல் குறித்த புரிதல் வந்த பின்பு ‘கற்றது தமிழ்’ படத்தை பலரும் கொண்டாடியது போல், இத்திரைப்படமும் மக்களால் கொண்டாடப்படும். ஜனநாதன் தனது கடைசி படத்திலும் உழைக்கும் மக்களின் குரலாகவே ஒலித்திருக்கிறார்.

இதையும் படிங்க:மண்ணுக்கும் மனிதனுக்குமான இணைப்பைச் சொல்கிறது விவசாயம்: மகரிஷி பேசும் அரசியல்!

ABOUT THE AUTHOR

...view details