தமிழ்நாடு

tamil nadu

'தமிழ்நாட்டை புனரமைக்கும் பணியில் பங்களிக்க மக்களை அழைக்கிறோம்'

By

Published : Jul 3, 2020, 2:44 PM IST

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தை முறையாக கையாளவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

kamalhassan statement on sathankulam murder
kamalhassan statement on sathankulam murder

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சாத்தான்குளம் காவல் துறையினரின் அராஜகம் ஒற்றை நிகழ்வல்ல. தோண்டத் தோண்ட வெளிவரும் குற்றங்கள், ஒரு காவல் நிலையத்தில் இத்தனை தவறுகள் என்றால் தமிழ்நாடு முழுவதும் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது.

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காவல் துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறுவதும், காவல் துறையை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தாக்கப்படுவதும், சிறைச்சாலை மரணங்களும் நடந்தேறிக்கொண்டே இருக்கிறது. காவல் துறையின் கண்காணிப்பில் நிகழும் மரணங்கள் இந்தியா முழுவதும் நடக்கும் பெருங்குற்றம்.

அதில் தமிழ்நாடு இவ்வகை மனித உரிமை மீறல் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். காவல் துறையில் வரம்பு மீறல்கள் சாமானியர்களை அவமரியாதையாக பேசுவதில் தொடங்கி இன்று மக்களின் பாதுகாப்பையும் வாழ்க்கையையும் அச்சுறுத்தும் அளவிற்கு ஆளும், ஆண்ட கட்சிகள் வளர விட்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் என தவறினை வேரோடு அகற்ற முயற்சிகள் தொடங்கி இருக்கிறது.

இதன் மூலம் முதல்கட்டமாக தமிழ்நாட்டை ஆண்ட ஆளும் கட்சியில் தொடர்ந்து புறக்கணித்து வரும் காவல்துறையில் சீரமைப்பை உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் காவல்துறையின் அதிகாரத்தை கண்காணிக்கவும், அதிகரிக்கும் பணி அழுத்தம் அவர்களை பாதிக்காமல் மக்கள் பணியாற்ற வழி செய்யும் வகையில் பல முறை திட்டங்களையும் வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறது.

அந்த வழிமுறைகளை தமிழ்நாடு அரசு பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிடவும், கண்காணிக்கவும் வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் காவல்துறையினரின் தவறுகளையும் அத்துமீறல்களையும் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக காவல்துறையில் புகார் அமைப்பை அமைத்து அதை முறையாக செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரைக்கும் நீதிபதிகள் இடம்பெற வேண்டும். அரசின் கட்டுப்பாடு சுதந்திரமாக இயங்கும் இந்த இயக்கம் அரசியல் அழுத்தங்களிலிருந்து காவல்துறையையும் காவல்துறை அலுவலர்களில் இருந்து மக்களைக் காத்திடும் வேலை செய்யும்.

ஆனால் தமிழ்நாடு அரசு பெயருக்கு அமைந்துள்ள மாநில அளவிலான அமைப்பில் காவல் அலுவலர்களே அந்தப் புகார்களை விசாரிக்கும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை, மக்களின் உயிரையும் மதிக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது.

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தில் கூட முதலமைச்சர் அதை மறைக்க முயன்று அவசர அறிக்கை விட்ட காட்சிகள் நமக்கு காவல்துறை தனித்து செயல்படவில்லை, ஆட்சியாளர்கள் ஆதரவோடுதான் செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. 2001 - 2018 வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையின் கண்காணிப்பில் உயிரிழந்துள்ளார்கள்.

ஆனால் அது தொடர்பாக ஒருவர் மீது கூட வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது தமிழ்நாட்டை ஆண்ட திமுகவும், அதிமுகவும் இந்த விஷயத்தில் கண்காணித்து வரும் மெத்தனப் போக்கை மக்களுக்கு சொல்லும் காவல்துறை மக்களை பாதுகாக்க வேண்டுமானால், காவல் துறையிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இத்தனை காலம் ஆண்டவர்கள் நீதித்துறையின் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மக்கள் பாதுகாப்பையும் அலட்சியமாக கையாளும் இந்த அரசியல்வாதிகளை மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. இந்த சீர்திருத்தங்களை தமிழக அரசில் செயல்படுத்த வைக்க மக்கள் நீதி மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சட்டத்தின் வழியே நம் உரிமைகளை காத்திடும் இப்போரில் மக்கள் நீதி வெல்லும் வரை மையம் போராடும். அதே நேரத்தில் இம்மாற்றங்களை செய்யும் பொறுப்பில் இருப்பவர்களை மாற்றும் அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது.

ஆனால் கொலை வழக்கில் யார் குற்றவாளி என்பதை கூட தெரிவிக்காமல் வழக்காடுதல் உரிமையை கேட்டு போராடும் மக்கள் மீது அடக்குமுறை, மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அலுவலர்கள் மீதான தாக்குதல்கள் என தமிழ்நாட்டையும் தமிழர்களையும் கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளையும் அகற்றி தமிழ்நாட்டை புனரமைக்கும் பணியில் பங்களிக்க மக்களை அழைக்கிறோம்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசும் காவல்துறையும் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் மக்களாட்சி என்பது மக்களின் ஆட்சியாகவும், மக்களுக்கான ஆட்சியாக இருந்திட மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய நேரம்.

இது ஒரு ஊர் ஒரு காவல் நிலையம் இரு உயிர்கள் மட்டும் பற்றியது அல்ல இந்த போராட்டம் பல நூறு உயிர்களை பல்லாயிரக்கணக்கான குற்றங்களை, பல லட்சம் கோடி ஊழல் என தமிழகத்தை அரித்துக் கொண்டிருக்கும் சீர்கேட்டை செம்மைப்படுத்த மக்கள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details