தமிழ்நாடு

tamil nadu

உக்ரைன் போர்: மனிதநேய செயல்பாடுகளுக்கு 15 மில்லியன் டாலர் அளிக்கும் 'மெட்டா'

By

Published : Mar 5, 2022, 5:17 PM IST

ரஷ்ய, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், மனிதநேய செயல்பாடுகள் புரியும் லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முதல் போர் தொடங்கியுள்ளது. பத்தாவது நாள்களாக தொடரும் போரில், இருநாட்டுத்தரப்பிலும் சேதங்கள் அதிகமாகியுள்ளன.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனால், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் மனிதநேய செயல்பாடுகளுக்காக பணிபுரியும் அமைப்புகளுக்கு 15 மில்லியன் டாலர் (ரூ. 114.64 கோடி) நிதியுதவி அளிக்க உள்ளதாக பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் தலைமை நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.

மேலும், ஐநா சபையின் முகமைகளுக்கும், சில லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கும் தனியே, 5 மில்லியன் டாலர் (ரூ. 38.21 கோடி) நிதியை நேரடியாகவும் வழங்கியுள்ளது.

விளம்பரத்தில் வரவு

இந்த நிதி, சர்வதேச மருத்துவப் பட்டாளம் (International Medical Corps) போன்ற நிறுவனங்கள் உக்ரைனில் நடமாடும் மருத்துவ குழுக்களை நிர்வகிக்கவும், போர் சுழலில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு உடனடி மருத்துவ சேவை அளிப்பதற்கும் பயனளிக்கும்.

மெட்டா நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 3) வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்திற்கும் (UNICEF) நாங்கள் நிதியளிக்கிறோம். அதன்மூலம், உக்ரைன் மற்றும் போர் பதற்றம் உள்ள பகுதிகளில் குழந்தைகள், அவர்கள் சார்ந்தோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய இயலும்.

மீதமுள்ள, 10 மில்லியன் டாலர்கள், போர் குறித்து சரியான, தேவையான தகவலை பகிரவும், உடனடியாக செயல்படவும் நிதி கோரும் (Fund Raisers) லாப நோக்கமற்ற அமைப்புகளின் விளம்பரத்தின் வருவாயில் வரவு வைக்கப்படும்" என கூறியுள்ளது.

ரஷ்ய ஊடகங்களுக்கு தடை

மேலும், "ரஷ்யா மற்றும் உக்ரைனில் நாங்கள் சில சிறப்பம்சங்களையும் கொண்டு வந்துள்ளோம். தேவைப்படும் பயனாளர்கள் தங்களின் வலைதளப்பக்கங்களை மறைத்துக்கொள்ளலாம் (Profile Lock), நண்பர்களை தேடுவது (Search Friends List), மெசஞ்சரில் கூடுதல் அமைப்புகளை நீக்குவது போன்ற மாற்றங்களை செய்துள்ளோம்.

மேலும், ரஷ்ய படைகள் உக்ரைனில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பரவும் வதந்திகளை தடுக்க ஆர்டி, ஸ்பூட்னிக் ஆகிய ரஷ்ய ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் இருந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் வரும் பதிவுகளை குறைத்து, உலகளவில் அவற்றை எங்கள் தளங்களில் கண்டறிவதை நாங்கள் கடினமாகியுள்ளோம்" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆப்பிளின் M2 சிப் இந்தாண்டு அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details