தமிழ்நாடு

tamil nadu

இம்ரான் கான் விடுதலையில் சிக்கல்! ராணுவத்தின் பிடியில் சிக்கிய பரிதாபம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 5:40 PM IST

Imran Khan arrested : கடந்த ஆண்டு மே மாதம் ராவல்பிண்டி பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் தாக்கப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Imran Khan arrested
Imran Khan arrested

இஸ்லாமாபாத் :சைபர் முறைகேடு வழக்கில் இருந்து விரைவில் விடுவிக்கப்பட இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் ரானுவ தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறையில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. அது முதலே அரசு விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே வெளிநாடு மற்றும் அரசு சார்ந்த பயணங்கள் மற்றும் சந்திப்புகளில் தனக்கு வழங்கப்பட்ட விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து முறைகேடு மூலம் கைப்பற்றி விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் பாகிஸ்தான் துணை ராணுவத்தின் பாதுகாப்பு முனையங்கள், ராவல்பிண்டி ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டன. இதுகுறித்து பாகிஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு ரகசிய சட்டங்களை ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவருக்கு விடுவிப்பு வாரண்ட் வழங்கப்பட இருந்தது.

இந்நிலையில், அடிலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இம்ரான் இன்று (ஜன. 9) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இம்ரான் கான் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் இம்ரான் கானை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அவகாசம் கோரினர்.

போலீசாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அடிலா சிறையில் வைத்தே இம்ரான் கானை விசாரிக்கக் கோரி உத்தரவிட்டனர். முறைகேடு வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மற்றொரு புதிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :ஜப்பானை மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

ABOUT THE AUTHOR

...view details