தமிழ்நாடு

tamil nadu

நாளை இஸ்ரேலுக்கு விரைகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 8:31 AM IST

President Joe Biden: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் மிகவும் இக்கட்டான சூழலைக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு செல்ல உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வாஷிங்டன் (அமெரிக்கா): கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலைத் தொடங்கியது. இதனையடுத்து, இஸ்ரேலும் தனது தாக்குதலைகளைக் கொடுக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக பொதுமக்கள் பலரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். முக்கியமாக, எல்லைப் பகுதியான காசா நகர் முழுவதும் அழியும் சூழல் தற்போது உருவாகி உள்ளது. அங்கு வசித்த பலர், தங்களது உயிர், உடமைகள், உறவினர்கள் என பலவற்றை இழந்து உள்ளனர்.

எனவே, அவர்களுக்கு தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், மருத்துவ உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. அதிலும், அமெரிக்கா ராணுவப் பொருட்களையும் வழங்கி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (அக்.18) இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரிகள் உடன் நடத்தப்பட்ட 7 மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இதனை இன்று (அக்.17) அறிவித்தார். இதன் மூலம், இஸ்ரேலுக்குப் பின்னால் அமெரிக்கா வலுவாக உள்ளதாக காட்ட விரும்புகிறது என கருதப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ள X பதிவில், “ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையாக நிற்க, புதன்கிழமை நான் இஸ்ரேலுக்குச் செல்கிறேன். கடுமையான மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்யவும், தலைவர்களைச் சந்திக்கவும், பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை தெளிவுபடுத்தவும் நான் ஜோர்டனுக்குச் செல்வேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து ஈடுபட்டன. இதன் விளைவாக, ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக இந்தியர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை, மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநிலப் பிரதிநிதிகள் வரவேற்றனர். தொடர்ந்து, அவர்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் எதிரொலி: சிறுவன் கொலை; பெண் படுகாயம்.. வீட்டு உரிமையாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details