சியோல்:வட கொரியா நாட்டின் 75வது நிறுவன தின கொண்டாட்டங்கள், செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் உற்சாகமாக அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் பியாங்யாங்கில், பிரமாண்ட துணை ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் சீன நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய நாட்டின் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வு, பல சர்வதேச நாடுகளின் கவனத்தை, வடகொரியா பக்கம் திருப்பி உள்ளது. அமெரிக்கா உடன் வடகொரியா தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், வடகொரியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உடன் நட்பு பாராட்டி வருவது, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், விரைவில் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அங்கு அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளதாக, வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ரஷ்ய - உக்ரைன் போர் நிகழ்வினால், ரஷ்ய படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தம், இந்த சந்திப்பில் மேற்கொள்ளப்படலாம், என்று அந்த ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
வடகொரிய நாட்டின் நிறுவன தின கொண்டாட்டத்திற்கு, சீனா, அதன் துணை பிரதமர் லியூ குவோஜோங் தலைமையில் பிரதிநிதிகள் குழுவை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. கிம் - புதின் சந்திப்பு விரைவில் நிகழ உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தெரிவித்து உள்ள நிலையில், இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, வடகொரியா இன்னும் வெளியிடவில்லை.