தமிழ்நாடு

tamil nadu

தண்ணீர் நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல: ராதாரவி சரவெடி!

By

Published : Apr 20, 2023, 2:17 PM IST

தண்ணீர் நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதை தான் மாவீரன் பிள்ளை படத்தில் காட்டியிருக்கிறார்கள். இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என ராதாரவி கூறினார்

Etv Bharat
Etv Bharat

சென்னை: KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படம் நாளை (ஏப்ரல் 21) திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு இந்தப்படத்தின் பிரிவீயு ஷோ திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு நடிகர் ராதாரவி பேசும் போது “மதுவை ஒழிப்போம், மக்களை காப்பாற்றுவோம், விவசாயிகளை காப்பாற்றுவோம், பெண்களை காப்பாற்றுவோம்” என ஒரு நல்ல கருத்தை இதில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

படம் பார்க்கும் போது இது நான் நடித்த படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாறுதலாக இருக்கிறது. தண்ணீர் நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதை தான் இதில் காட்டியிருக்கிறார்கள். இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்” என்றார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா பேசும்போது, “கருணாநிதி ஆட்சியில் தான் தமிழ்நாடு சாராயம் ஓடும் மாநிலமாக மாறியது. இன்றைக்கு டாஸ்மாக்கிற்கு இலக்கு வைத்து செயல்படுகிறார்கள். வருமானம் அதிகமாக காட்டாத 40 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கின்றனர். இதைவிட கேவலமான ஒரு நிகழ்ச்சி வேறு எதுவும் இருக்காது. அதனால் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாகி இருக்கும் இந்த படத்தை, தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் தடுத்தாலும் பெண்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு எந்த அளவுக்கு மதுவால் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று சொன்னால், ஏற்கனவே சகோதரி கனிமொழி தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகம் இருக்கிறார்கள் காரணம் இளைஞர்கள் அனைவரும் குடித்து செத்துப் போய் விடுகிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் மது விலக்கு கொண்டு வர வேண்டும் என அவர்களே ஒரு சமயத்தில் குரல் கொடுத்தார்கள்.

அப்படி தங்கள் வசதிக்காக மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தான் இன்று அதிகமாக மது விற்பனைக்கு கணக்கு காட்டாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கின்றார்கள். இந்த அராஜகமான சூழ்நிலைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினால் தான் தமிழ்நாடு திருந்தும்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, “தமிழ்நாட்டில் மதுவானது மக்களை மிருகங்களாக மாற்றி குடும்பங்களை சீரழித்து வருகின்றது. கருணாநிதி மதுக்கடையை துவக்கினார். பிறகு அவரே மூடினார். மீண்டும் தொடங்கிய எம்ஜிஆர் பின்னர் தனியாருக்கு மாற்றினார். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் அதை அரசாங்கமே நடத்தும் ஒரு அவல நிலையை உருவாக்கி விட்டார். போன வருடத்தை விட இந்த வருடம் அதிக வசூல் காட்ட வேண்டும் என தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கும் கொடுமையும் நடக்கிறது.

குடியால் அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து அதில் அவர்களுக்கு உயிர் காக்கின்ற, உடம்பில் மீண்டும் புத்துணர்ச்சியை கொண்டு வரச் செய்யும் சித்தா மருந்துகளை கொடுக்க செய்ய வேண்டும். குடிக்கு எதிராக போராடி உயிரை விட்ட ஐயா சசிபெருமாளின் நினைவை போற்றும் விதமாக இந்த படத்தை இயக்குனர் ராஜா எடுத்துள்ளார். இது போன்ற படங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு வேண்டும்” என்று பேசினார்.

இதையும் படிங்க:மாமன்னன் படத்தில் வேறு மாதிரியான வடிவேலுவை பார்ப்பீர்கள் - இயக்குநர் மாரி செல்வராஜ்!

ABOUT THE AUTHOR

...view details