தமிழ்நாடு

tamil nadu

“உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க” - சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு பேச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 10:00 PM IST

ரசிகர்களை பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகிறது என நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பேச்சு

“உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க” - சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு பேச்சு!
“உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க” - சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு பேச்சு!

சென்னை: இயக்குநர்பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், சந்திரமுகி 2. இப்படத்திற்கு ஆஸ்கர் வெற்றியாளர் எம்எம் கீரவாணி இசை அமைத்துள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 25) சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது, “ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பதுதான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களுக்கு சந்தோஷம்.

ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால், கலைஞர்களாகிய நாங்கள் இல்லை. மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றிப் படம் சந்திரமுகி 2. இந்த இரண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்தப் படத்தில் பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டார். இந்தப் படத்தில் பார்க்கப் போற வடிவேலு வேறு” என்றார்.

மேலும், “முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். சிறிது நாட்களுக்கு முன்பு என்னை வரவிடாமல் கதவை பூட்டு போட்டு சாவியைத் தூக்கிட்டு போய்விட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லை என்று கூறினார்கள். அதுக்கு என்ன காரணம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவியைக் கொடுத்து வாழ்க்கையைத் தொடங்கி வைத்தவர் எங்கள் அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமாக கும்பிடுவது அய்யனார், கருப்பன்.

அந்த இரண்டு தெய்வத்துக்குப் பிறகு தெய்வமாக நான் அண்ணன் சுபாஷ்கரனைத்தான் வணங்குகிறேன். யாரு என்ன சொன்னாலும், என்னை மறுபடியும் சினிமாவில் நடிக்க வைத்தவர், அண்ணன் சுபாஷ்கரன்தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியாக இருந்தார்.

இதையும் படிங்க:“ரஜினிகாந்த் 170” படத்தின் பூஜை ஆரம்பம்...உற்சாக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!

மாமன்னன் படத்தை முடித்த பிறகு பெரிய இயக்குநரான் பி.வாசு என்னைக் கூப்பிட்டார். அவர் படத்தில் நிறைய கேரக்டரில் நடித்திருக்கிறேன். அவருக்கு இப்போது 70 வயது ஆகிறது. வயதுதான் 70. தவிர 35 வயது மாதிரிதான் இருக்கிறார். என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் கூறினார். பொதுவாக வாசு யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன் லைனை மட்டும்தான் சொல்வார்.

இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதே இல்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன். அதற்கு பிறகு இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல, அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல, சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையைக் கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம்தான் சந்திரமுகி 2.

சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடுபடுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குழு மாறிவிட்டது.‌ இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பல விஷயங்களை வெற்றி விழாவில் சொல்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:"வேட்டையன் ரோல் பண்ணும் போது பயந்து கொண்டே நடித்தேன்" - ராகவா லாரன்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details