தமிழ்நாடு

tamil nadu

2020ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளைப் பெறவுள்ள தமிழ் திரைப்படங்கள்

By

Published : Jul 22, 2022, 6:17 PM IST

2020ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படங்கள் குறித்து ஓர் பார்வை

2020ற்கான தேசிய விருதுகளைப் பெறவுள்ள தமிழ் திரைப்படங்கள்
2020ற்கான தேசிய விருதுகளைப் பெறவுள்ள தமிழ் திரைப்படங்கள்

2020ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு மிகக் கடினமான ஆண்டு என்றே சொல்லலாம். கரோனா பாதிப்புகளின் காரணமாக திரையரங்குகள் எதுவும் இயங்க முடியாத நிலையில், படப்பிடிப்புகளும் பெரிதாக நடத்த முடியாத நிலையில், மற்றொரு பக்கம் ஓடிடி நிறுவனங்களின் வருகையும் தமிழ் திரையுலக மத்தியில் பெருகத் தொடங்கின.

இருப்பினும் பல தரமான திரைப்படங்களும் வெளியாகின. அந்த வரிசையில் வெளியான திரைப்படங்கள் தற்போது 2020ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. முதலில் - நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கோரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’. இந்தத் திரைப்படம் தான் தமிழில் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட முதல் பெரும் ஹீரோவின் படம்.

இந்தத் திரைப்படம் தமிழ் திரையுலகில் ஓடிடி வருகையை பலப்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது. இப்படம் வெளியான முதலே விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், பெரும் பாராட்டுகளையும் பெற்றது. இது ’ஏர் டெக்கான்’ விமான நிறுவனத்தின் நிறுவனர் கோபி நாத்-ன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். வணிகரீதியாகவும் இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தத் திரைப்படம் 2020ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய இப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கோராவிற்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையை அமைத்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த பிண்ணனி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இது இவர் பெறவிருக்கும் மூன்றாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகருக்கான விருதை இப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவும் சிறந்த நடிகைக்கான விருதை இப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியும் பெறவுள்ளனர். அடுத்த படியாக இயக்குநர் வசந்த் இயக்கத்தில் உருவான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான (தமிழ்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் வழங்கப்படவுள்ளது. எழுத்தாளர்கள் அசோக மித்ரன், ஜெயமோகன், ஆதவன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஓர் ஆண்டாலஜி திரைப்படம் தான் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’.

பல்வேறு காலக் கட்டங்களிலும் பெண்களின் நிலை குடும்பத்திலும், சமூகத்திலும் எவ்வித மாற்றங்களுமின்றி இருப்பதை இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் காட்டிருப்பார். இந்தத் திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்தது.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளையும் வரவேற்புகளையும் பெற்றது. இது இயக்குநர் வசந்திற்கு மூன்றாவது தேசிய விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த படியாக நடிகர் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் பெறவிருக்கிறார். இவர் சிறந்த திரைக்கதை வசனத்திற்காகவும், சிறந்த அறிமுக இயக்குநரின் படத்திற்கான தேசிய விருதுகளை பெறவிருக்கிறார். ஓர் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அரசியல் நய்யாண்டி திரைப்படமான இந்தத் திரைப்படம் விமர்சகரீதியாக பெரும் பாரட்டுகளைப் பெற்றது.

இதையும் படிங்க: தேசிய விருதுகள் 2020 : சிறந்த திரைப்படம்(தமிழ்) - ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

ABOUT THE AUTHOR

...view details