தமிழ்நாடு

tamil nadu

பழிக்குப் பழியாக இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை!

By

Published : Jun 12, 2021, 9:47 PM IST

குன்றத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் ஓட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் தனசேகர் கொலை
குன்றத்தூர் தனசேகர் கொலை

திருவள்ளூர்: குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர்(36). அதே பகுதியிலுள்ள கிரசரில் வேலை செய்து வந்தார். இன்று மதியம் தனது நண்பர் தண்டபாணி என்பவருடன் வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரை நோக்கி ஓடி வந்தனர். இதைக் கண்டதும் தனசேகர் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, அருகிலிருந்த காலி இடத்திற்கு நண்பருடன் இறங்கி ஓடினார்.

ஆனால், கொலைவெறியுடன் இருந்த கும்பல், தனசேகரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட தனசேகர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் முன்விரோதம் காரணமாக ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனசேகர் கைது செய்யப்பட்டார்.

அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக தற்போது தனசேகரை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து குன்றத்தூர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details