தமிழ்நாடு

tamil nadu

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலையென்ன? - அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்

By

Published : Oct 14, 2019, 5:01 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

சிபிஐ-யின் இயக்குநர் சார்பாகச் சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், நான்கு மாதத்தில் விசாரணையை முடிக்கவும், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் அக்டோபர் எட்டாம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தற்போதுவரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100 ஆவணங்களுக்குப் பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

ஆகவே அதனைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்துக் கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். இது குறித்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ இயக்குநர் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, மேலும் கால அவகாசம் கோரினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ‘எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details