தமிழ்நாடு

tamil nadu

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது - நீதிபதிகள் கருத்து

By

Published : Nov 19, 2021, 7:45 PM IST

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது என்றும் மொழியை மொழியாக கையாள வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

c
c

மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் வேண்டும்

அந்தத் திட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தும்போது தமிழ்நாடு அரசின் அரசாணை, விளம்பரங்கள், செய்திக் குறிப்புகளில் மேற்படி இந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கும் மற்றும் எதிர் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழ் மொழியில் மொழிப் பெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

'மொழியை மொழியாக கையாள்க'

இந்த மனு இன்று (நவம்பர் 19) நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை மொழியாக கையாள வேண்டும்' என கருத்து தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில், தமிழ் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறைகளில் இது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மாநில மொழிகளில் அவசரகால அறிவிப்பு: விமான போக்குவரத்துத் துறை விரைந்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details