சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னை பெரும்பாக்கத்தில் 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தையும் டெல்லியிருந்து இன்று (ஜனவரி 12) நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு
அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டன.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 450 எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடங்கள் கூடுதலாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 200 மருத்துவ வல்லுநர்கள், பணியாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம், இம்மாவட்டங்கள், சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் சுமார் ஒன்றரை கோடி மக்களுக்குத் தரமான உயர் மருத்துவச் சிகிச்சைகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும்
இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “வணக்கம், தை பிறந்தால் வழி பிறக்கும், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்வி என்பது அனைவருக்கும் தரக்கூடிய ஒன்று.
கரோனா தொற்று காலகட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் 83 ஆயிரத்திலிருந்த மருத்துவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வரும் ஆண்டில் இந்தியாவில் உயர்தர மருத்துவ சேவை டெலி மெடிசன் முக்கியப் பகுதியாக மாறும்.