தமிழ்நாடு

tamil nadu

இலங்கைக்காக அரிசி கொள்முதல்-தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

By

Published : May 12, 2022, 2:20 PM IST

srilanka economic crisis இலங்கை பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னைபொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் இந்த அரிசி அதிகவிலைக்கு வாங்கப்படுவதாக கூறி, திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

மிச்சமாகும் கோடிகணக்கான பனம்: அந்த மனுவில், ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகள் என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்திய உணவுக் கழகம் 1 கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாகவும், அதில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்:இதுசம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்திய உணவு கழக அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல், அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

விசாரணையை தள்ளிவைத்த நீதிபதிகள்:இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுவதாகவும், அவசர நிலை நேரங்களில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details