தமிழ்நாடு

tamil nadu

சொத்துக்குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதம்

By

Published : Sep 1, 2021, 8:19 PM IST

ராஜந்திர பாலாஜி
ராஜந்திர பாலாஜி ()

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வருமானத்திற்கு அதிகமாக 10 விழுக்காட்டிற்கும் குறைவாக சொத்து சேர்த்து இருப்பதால், அவர் மீதான வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை:மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்டிருந்தது.

இருவேறு தீர்ப்புகள்

இந்த வழக்கை, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்தியநராயணன், ஹேமலதா ஆகியோர் இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர்.

நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

மற்றொரு நீதிபதியான ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்குப்பதிந்து விசாரிப்பதால், எந்தப் பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக, நீதிபதி எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (செப். 1) விசாரணைக்கு வந்தது.

முன்னாள் அமைச்சர் தரப்பு வாதம்

அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், "ஏற்கெனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அது ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வர உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வந்தால், அந்த வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். மூன்றாவது நீதிபதி விசாரிக்க முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.

முடித்து வைக்கப்பட்ட வழக்கு

ஏற்கெனவே, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யபட்டுள்ளது.

மகேந்திரன் தொடர்ந்த வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

முடித்து வைத்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கின், தீர்ப்பில் ஒரு நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, மற்றொரு நீதிபதி பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 2011-13 ஆண்டுகளுக்கு இடையில் இவர் சேர்த்த சொத்துகளை விசாரிக்க வேண்டும் எனவும்; அதுவும் கால அவகாசத்தை 1996இல் இருந்து கணக்கில் எடுக்க வேண்டும் எனவும் கூறி, சுமார் 22 ஆண்டுகள் சேர்த்த சொத்துகளை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது தவறு.

7 ஆண்டுகள்தான்... 22 அல்ல

லஞ்ச ஒழிப்புத் துறை விதிகளின்படி ஏழு ஆண்டுகளுக்குள் தான் காலக்கெடு இருக்க வேண்டும், 22 ஆண்டுகள் இருக்கக் கூடாது. ஆரம்பகட்ட விசாரணை முறையாக நடைபெற்றது.

ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக 10 விழுக்காட்டிற்கும் குறைவாகத் தான் சொத்து சேர்த்து இருப்பதால், அந்த வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் வாதம் நாளை (செப். 2) தொடர்கிறது.

இதையும் படிங்க: பிரேமலதா பாஸ்போர்ட்டை திரும்ப கொடுங்கள் - நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details