தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூர் அருகேயுள்ள எம்ஆர்எஃப் தனியார் நிறுவனத்தை மூடக்கோரி மனு

By

Published : Sep 19, 2022, 6:17 PM IST

Etv Bharat

பெரம்பலூர் மாவட்டம், கனரா கிராமத்தில் உள்ள எம்ஆர்எஃப் தனியார் நிறுவனத்தை மூட வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

சென்னை:பெரம்பலூர் அருகே இறையூர் கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்காக எம்ஜிஆர் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலங்களை விட்டு அம்மாவட்ட ஆட்சியர் வெளியேறும்படி கூறுவதாகவும்; கனரா கிராமத்தில் உள்ள எம்ஆர்எஃப் தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுவதாகவும் அதனை மூட வேண்டும் எனவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (செப்.19) முதலமைச்சர் தனிச்செயலரிடம் மனு வழங்கிய பின் செய்தியாளரைச் சந்தித்த அய்யாக்கண்ணு, 'நரிக்குறவர் மக்களுக்கு தற்போது மத்திய அரசு, பழங்குடியினர் (ST) சான்றிதழ் வழங்க உள்ளது. நரிக்குறவர் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பெரம்பலூர் மாவட்டம், இறையூர் கிராமத்தில் 353 ஏக்கர் நிலம், 153 நரிக்குறவருக்கு வழங்கப்பட்டன.

40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நரிக்குறவர் இன மக்கள் பன்னிரெண்டு கிணறுகளை வெட்டி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது இந்த இடம் நரிக்குறவர் மக்களுக்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் கூறி வருகிறார். மேலும் இதுகுறித்து இன்றைய தினம் போராட்டம் நடத்தி முதலமைச்சர் தனிச்செயலரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இதுகுறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்துப்பேசும் வரை நாங்கள் அனைவரும் சென்னையில்தான் இருப்போம். மேலும், இந்த இடத்திற்கு 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டா வழங்கப்படவில்லை. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நரிக்குறவர் மக்களுக்காக கட்டப்பட்ட பள்ளிக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, இவை இரண்டிற்கும் பட்டா வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் கனரா கிராமத்தில் உள்ள எம்ஆர்எஃப் தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் வேதிப்பொருட்களால், நிலமும் நீரும் மாசுபடுகின்றன. இதனால், அப்பகுதியிலுள்ள நரிக்குறவர் இன பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா, சிறுநீர் கோளாறு மற்றும் கல்லீரல் வீக்கம் உள்ளிட்டப் பல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்த ஆலையை மூட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உடல் மனநலப்பாதிப்புகளில் மகன்கள் - ஆயிரம் ரூபாயில் குடும்பத்தை நடத்தும் தாயின் கண்ணீர் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details