சென்னை:இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்ரீகபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்னுமிடத்தில் அருள்மிகு பழனியாண்டவர் கலை, அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர அக்டோபர் 8ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பி.காம், பிபிஏ, பிஎஸ்சி(கம்ப்யூட்டர் சயின்ஸ்), பிசிஏ, தமிழ், ஆங்கிலம், கணக்கு, உடற்கல்வி இயக்குநர், நூலகர் ஆகிய பணியிடங்களுக்கு வரும் 18 ந் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10, +2, உயர்கல்வி பட்டம் பெற்று இருப்பதுடன், செட்/நெட்/பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.