தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு... 5 பேருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Aug 26, 2022, 12:40 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனை பேரில் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி மரண வழக்கு
மாணவி மரண வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த மாணவி ஶ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி மரணமடைந்தார்.

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர். சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஜாமின் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் எனவும், பள்ளி தொடர்பான சிசிடிவிகளின் பதிவு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், 38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், மேலும் காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு தெரிவிக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட்.26) மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "மாணவியை படி" என்று சொன்னதாலேயே தற்கொலை செய்து கொண்டார். இது பாலியல் வன்கொடுமையோ?,கொலையோ? கிடையாது. மாணவி மரணத்தால் ஏற்பட்ட கலவரத்தில் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், முதலில் இந்த வழக்கு சந்தேகம் மரணம் என்று பதிவு செய்யப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டதாகவும், சிபிசிஜடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மாணவியின் தற்கொலை கடிதத்தையும் சுட்டி காட்டினார்.

தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும், சாட்சிகள் கலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் பள்ளித் தாளாளர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு தொடரப்பட்டு அதில் அவர் விடுதலையாகி உள்ளார் என்றும் தெரிவித்தார்.

இதே பள்ளியில் ஏற்கனவே இரண்டு தற்கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் வாதிட்டார். ஏற்கனவே நடத்தப்பட்ட உடற்கூராய்வில் எந்த முரண்பாடும் இல்லை என்று ஜிப்மர் மருத்துவமனை நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இது பாலியல் வன்கொடுமையோ? கொலையோ? இல்லை என்றாலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் கொலை வழக்காக மாற்ற தயங்க மாட்டோம் என்றும் வாதிட்டார்.

ஸ்ரீமதியின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சுப்பு, முதல் உடற்கூராய்வு அறிக்கைக்கும், இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கைக்கு முரண்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் பள்ளி தாளாளரின் மகன்கள் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனை பேரில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:முதல்முறையாக நேரடி ஒளிபரப்பாகும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை

ABOUT THE AUTHOR

...view details