சென்னை:நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நேற்று (பிப். 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து நாளை (பிப். 22) நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.
அந்த மனுவில், சென்னையில் 173ஆவது வார்டு வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை உள்ளே அனுமதிக்காமல் விதிமீறல் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் பணம், பரிசுப்பொருட்கள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 173ஆவது வார்டில் தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறினர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் இன்று (பிப். 21) நண்பகல் 1 மணியளவில் தலைமை செயலாளர் வெ. இறையன்புவை சந்திக்க உள்ளார். நேற்று முன் தினம் நடந்த தேர்தல் விதிமீறல்களை பற்றி புகார் அளிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் - மநீம ஆர்ப்பாட்டம்