தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லம் அரசுடைமை உத்தரவு செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Nov 24, 2021, 2:37 PM IST

Updated : Nov 24, 2021, 7:41 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் ()

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை(Jayalalitha Veda Nilayam house) அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து அவரது உறவினர்களான ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும், விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இதன் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷாயி (Justice N. Seshasayee) இன்று வழங்கியுள்ளார்.

அதன்படி, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி அரசு பிறப்பத்த சட்டம் செல்லாது. மூன்று வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாரிசுகள் தரப்பு வாதம்

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை.

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்தும், வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதம்

தமிழ்நாடு அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதம் நிராகரிப்பு

பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என்ற அரசின் வாதம் நிராகரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் வேதா நிலையத்திற்கான வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. கீழமை நீதிமன்றத்தில் நிலத்தை கையகப்படுத்த அரசு செலுத்திய ரூ 67.95கோடி இழப்பீடு தொகையை அரசு உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:orange alert: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - டெல்டா மாவட்டங்களில் கனமழை

Last Updated :Nov 24, 2021, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details