சென்னை: தமிழ்நாட்டில் 493 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்தியக் குழுவினர் தமிழ்நாட்டில் டெங்கு குறித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மத்தியக் குழு ஆய்வு
இதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'டெங்கு பரவல் சம்பந்தமாக அறிந்து கொள்வதற்கும், அது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஆலோசனைகளைத் தெரிவிப்பதற்கு ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக டாக்டர் ரோஷினி ஆர்தர், நிர்மல் ஜோய், ஜான்சன் அம்லா ஜோசிடின் ஆகிய 3 பேர் குழு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எங்கு டெங்கு பாதிப்பு இருக்கிறதோ, அங்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, சிகிச்சை அளிப்பது குறித்துக் கேட்டறிய இருக்கின்றனர்.
டெங்குவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழைத் தொடங்கிய உடன் டெங்கு பாதிப்பு பருவமழை காலத்தில் அதிகமாகும் என்பதால், முதலமைச்சர் ஏற்கெனவே 2 கூட்டங்களை டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
டெங்கு பாதிப்பு குறைவான மாநிலம் தமிழ்நாடு
இந்தியா முழுவதும் 9 மாநிலங்களுக்கு டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான குழு சென்று கொண்டு இருக்கிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொண்டு, தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளனர்.
ராணிப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டபோது, சிறப்பாகச் சிகிச்சை அளிப்பதாகக் கூறியுள்ளனர். டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளும், மருந்துகளும் இருப்பதாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். டெங்கு பாதிப்பில் மிகவும் குறைவாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான்.
493 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 20 பேர் டெங்குகாய்ச்சலில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 30ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.