தமிழ்நாடு

tamil nadu

நட்சத்திர விடுதிகளுக்கு குறைந்த அளவில் வரி விதிப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

By

Published : Feb 18, 2020, 3:18 PM IST

சென்னை: நட்சத்திர விடுதிகளுக்கு குறைவாக சொத்து வரி வசூலித்ததால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

tax
tax

சென்னையில் சிறிய அளவில் வீடு கட்டி, அதற்கானக் கடனை செலுத்தி வரும் மக்களுக்கு அதிக சொத்து வரியை விதிக்கும் மாநகராட்சி, நட்சத்திர விடுதிகளுக்கு குறைந்த அளவில் சொத்து வரி விதிப்பதாகக் கூறி, மக்கள் சட்ட உரிமைக் கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மனுவில், "ஒரு நாள் இரவு தங்குவதற்காக 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர விடுதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சொத்து வரி விதிக்கப்படுகிறது.

அறைகளின் கட்டண விவரங்களை ஹோட்டல்கள், தங்கள் இணையதளத்தில் தெரிவித்தும், அதைவிட மிகக் குறைவான கட்டணங்களை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இதே போல, திருமண மண்டபங்கள், ஒரு திருமணத்துக்கு 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி வரி விதிக்கப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குறைந்த வரி விதிப்பதால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இது தொடர்பாக முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கை மாநகராட்சி சொத்து வரி விவகாரம் தொடர்பாக, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரைத்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: சீருடைப் பணியாளர் தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details