தமிழ்நாடு

tamil nadu

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்... மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

By

Published : Sep 21, 2022, 2:21 PM IST

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ()

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(21-9-2022) கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தலைமைச்செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும், அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.

ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர் என்றும், மியான்மரில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டை கோருவதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்” என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details