தமிழ்நாடு

tamil nadu

சென்னை காவல் ஆணையருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவு - நலமுடன் இருப்பதாகத் தகவல்!

By

Published : Oct 14, 2021, 6:22 PM IST

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலியால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: வேப்பேரியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அலுவலகத்தில் 8ஆவது மாடியில் உள்ள அறையில் அலுவல் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உதவியாளர் அறையில் இருந்தும், அங்கிருந்த பாதுகாப்பில் இருந்த காவல் துறையினரும் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். வர சிறிது தாமதமானதால் நாற்காலியில் காவல் ஆணையரை அமர வைத்து 8ஆவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் காவல் துறையினர் கீழ் தளத்திற்கு கொண்டு வந்தனர்.

பிறகு அவரது காரிலேயே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றனர்.

ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு வயது 57. இதயத்தில் இரண்டு அடைப்பு இருப்பதால் அதை சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஞ்சியோ சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இதய செயல்பாடு மற்றும் உடல்நிலையை கண்டறியத் தேவையான முக்கிய பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடல்நிலை சீரடைந்த உடன் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் நலம் குறித்து கேட்டறிய தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேர்வாசிர்வாதம்
மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, "சங்கர் ஜிவால் நலமுடன் இருக்கிறார். அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை முடிந்துள்ளது. அவர் விரைவில் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார்" என்று கூறினார்.

காவல் ஆணையர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி!

ABOUT THE AUTHOR

...view details