தமிழ்நாடு

tamil nadu

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை!

By

Published : Jan 28, 2022, 5:15 PM IST

woman sp sexual harassment case
சென்னை உயர்நீதிமன்றம்

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜி மீது சிபிசிஐடி காவலர்கள் விசாரணையை தொடங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐஜி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்பி ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலங்கானாவிற்கு மாற்றியும், அதன் விசாரணை அறிக்கைகளை ஆறு மாதத்தில் தாக்கல் செய்யவும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

கால அவகாசம் வழங்க எதிர்ப்பு

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, 2019ஆம் ஆண்டில் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ.சத்திய நாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜன.28) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இந்த வழக்கு ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சிபிசிஐடி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, விசாகா கமிட்டி விதிகளின்படி துறை ரீதியான பாலியல் புகார்களை 90 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது.

மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நிலையில் உள்ளதாகவும் தற்போது சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையை தொடங்கி விட்டதாகவும், எனவே கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு மட்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்.. புதிய தேதி அறிவிப்பு ...

ABOUT THE AUTHOR

...view details