தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகள் நலன்...முக்கிய பங்காற்றும் வேளாண்மை துறை : தலைமைச்செயலாளர்

By

Published : Sep 24, 2022, 1:11 PM IST

வேளாண்மை துறை அனைத்து கிராமங்களுக்கும் சென்று விவசாயி சந்தித்து வருகிறது: தலைமை செயலாளர்

உழவர் நலன் சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து, அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று, விவசாயிகளை சந்தித்து, பரிந்துரைகளை வழங்குவதில் வேளாண் துறை மிகவும் முக்கியமான பங்காற்றி வருவதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை:தமிழ்நாடுவிவசாயிகளின் நலனுக்காக துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, துறை அலுவலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, ”தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் நவீனத்தொழில்நுட்பங்களை பின்பற்றி, மகசூலை அதிகரித்து,

அதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி, வேளாண்மைக்கு என தனிநிதிநிலை அறிக்கையினை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக தாக்கல் செய்து, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு இடர்பாடுகள் நிறைந்த வேளாண்மைத் தொழிலில் விவசாயிகள் உயர்மகசூல் பெற்று, அவர்களின் விளைபொருட்களை லாபகரமாக விலைக்கு விற்று வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலாக மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாடுஅரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் உழவர் நலன் சார்ந்த பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று, விவசாயிகளை சந்தித்து, அவர்கள் சாகுபடி செய்து வரும் பயிர்களை ஆய்விட்டு, அதற்கேற்றவாறு பரிந்துரைகளை வழங்குவதில் வேளாண்மை – உழவர் நலத்துறை மிகவும் முக்கியமான பங்காற்றி வருகிறது.

இதற்காக அரசு சமீபத்தில் 361 வேளாண்மை அலுவலர்களையும், 162 தோட்டக்கலை அலுவலர்களையும், 27 தோட்டக்கலை உதவி இயக்குநர்களையும் பணியமர்த்தி உள்ளது. இவ்வாறு புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பல்வேறு நிலைகளில் துறையின் செயல்பாடுகள் குறித்து, பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது”, என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ”ஒரே பயிரை அல்லது ஒரே இரகத்தை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, பல்வகை பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவித்தல், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற கணினித் தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு காணுதல், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டியதன் அவசியம், கால்நடைகளை உள்ளடக்கி கலப்புப் பண்ணையத்தை விவசாயிகளிடையே பெருமளவில் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

வாய்ப்புள்ள நிலங்களில் இயற்கைப் பண்ணையத்தை மேற்கொண்டு இயற்கை வேளாண்மை சாகுபடி மூலம் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு சந்தை வசதியை ஏற்படுத்தித் தருதல் போன்ற புதிய உத்திகளை வேளாண்மைத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் நன்கு தெரிந்து கொண்டு, விவசாயிகளிடையே எடுத்துச் செல்ல வேண்டும்”, என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கான பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.,

”பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு பயிர்களையும், ரகங்களையும் உருவாக்க வேண்டும், பனை மரம் ஏறுவதற்கு இலகுவான இயந்திரங்களையும், குட்டை ரக பனை மர இரகங்களை உருவாக்க வேண்டும்.

உழவர்களுக்கு உரிய தொழில்நுட்பங்களை விரைவாக கொண்டு செல்வதற்கு, பல்கலைக்கழகம், துறை, மற்றும் அரசுக்கு இடையே நெருங்கிய இணைப்பு இருக்க வேண்டும். கடந்த ஆண்டில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் , அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தன்னிறைவினை அடைவதற்கு துறை அலுவலர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதைஉம் படிங்க:உடல் உறுப்புக்காக பதிவு செய்து காத்திருப்போர் எத்தனை பேர்? பட்டியல் வெளியிட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்

ABOUT THE AUTHOR

...view details