தமிழ்நாடு

tamil nadu

விதிமீறலில் ஈடுபட்ட உரக்கடைகள் மீது நடவடிக்கை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

By

Published : May 12, 2022, 6:24 AM IST

Action

தமிழ்நாடு முழுவதும் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 52 உரக்கடைகளின் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விதிமீறலில் ஈடுபட்ட 243 உரக்கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை: உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சில இடங்களில் உரக்கடைகளில் தொடர்ந்து விதிமீறல்கள் நடைபெற்றதால், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, 750 மொத்த உர விற்பனைக் கடைகள், 11 ஆயிரத்து 548 கூட்டுறவு, தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்கள், 54 உர இருப்பு கிடங்குகள், 56 கலப்பு உர உற்பத்தி நிறுவனங்கள், 30 மாவட்ட சோதனை சாவடிகள், 7 தொழிற்சாலைகள் என மொத்தம் 12 ஆயிரத்து 445 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வில், 131 உரக்கடைகள் இருப்பு தகவல் பலகை இல்லாமல் உரங்களை விற்பனை செய்ததாகவும், 141 உரக் கடைகளில் உர இருப்பு வித்தியாசமும், 51 கடைகள் உரிய அனுமதி பெறாமல் உர விற்பனையில் ஈடுபட்ட வகையிலும், எட்டு உரக் கடைகள் உர விற்பனை முனையக்கருவியின் மூலம் (Point of Sale (PoS)) பட்டியலிடாமல் விற்பனை செய்ததாகவும், இரண்டு உரக் கடைகள் கட்டாயப்படுத்தி உரங்களுடன் இதர இடுபொருட்களையும் இணைத்து விற்பனை செய்ததாகவும், இரண்டு உரக்கடைகள் வேளாண் பயன்பாடு இல்லாத இதர பயன்களுக்கு உரங்களை விற்றதாகவும் தெரியவந்தது.

இவற்றில், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி, விதிமீறலில் ஈடுபட்ட ஒரு உரக்கடையின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 52 உரக்கடைகளின் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 243 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள உரக்கடைகளின் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பு உர உற்பத்தி நிறுவனம் ஒன்று சட்டத்திற்கு புறம்பாக உரிய அனுமதி பெறாமல், கலப்பு உரம் தயாரித்தது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது., சரக்கு வாகனத்தில் இருந்த 19 மெட்ரிக் டன் கலப்பு உரமும் வாகனத்துடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த கலப்பு உர உற்பத்தி நிறுவனத்தின் மீது 08.05.2022 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR)பதிவு செய்யப்பட்டு, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-ன்படி நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் உழவர் உதவி மையத்தில் (அலைபேசி எண்.93634 40360) பெறப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சீரான உர விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசின் உத்தரவை மீறி, இதுபோன்ற விதி மீறலில் ஈடுபடும் உரக் கடைகள் மீது துறை ரீதியாகவும், சட்டரீதியாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்லூரியில் கஞ்சா அடித்த மாணவர்கள் - கையும் களவுமாக பிடித்த காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details