தமிழ்நாடு

tamil nadu

குடிநீருக்காக மஞ்சளாறு அணை திறப்பு

By

Published : Jul 6, 2020, 3:14 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்ட குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Manjalaru dam open

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பகுதி பாசன நிலங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. மேலும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மஞ்சளாறு ஆற்றின் வழியாக உறைகிணறு அமைத்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளாக கொடைக்கானல் மலையின் தலையாறு நீர்வீழ்ச்சி உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் நீர் வரத்து முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக 57அடி நீர்மட்டம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து தற்போது 36 அடியாக சரிந்து குளம் போல் வறண்டு காணப்படுகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு பகுதி குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் மஞ்சளாறு அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக இன்று(ஜூலை 6) முதல் விநாடிக்கு 10கன அடி நீர் வீதம் இரண்டு நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று(ஜூலை 6) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 136.96மி.கன அடியாக இருக்கிறது. மேலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details