தமிழ்நாடு

tamil nadu

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான அவசர சட்டம் : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jul 8, 2020, 4:40 PM IST

சென்னை: கரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான கடன் வசூல், திவால் நடவடிக்கை தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யக் கூடாது என்ற அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High court order
High court order

வங்கி, நிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிப்பதற்காக, கடந்த 2016ம் ஆண்டு திவால், கடன் மோசடி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த சட்டதிருத்தங்கள், கடன் வசூல் நடவடிக்கைகளுக்காக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடர வழிவகை செய்கின்றன. கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, நாட்டில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடன் வசூல், திவால் நடவடிக்கை தொடர்பாக எந்த வழக்கும் தாக்கல் செய்யக் கூடாது என மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவித்து, அதை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ககன் போத்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத்திய அரசின் இந்த அவசர சட்டம், திவால், கடன் மோசடி சட்ட விதிகளுக்கு எதிரானது, கடன் வசூல் தொடர்பான நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர நிறுவனங்களுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் சங்கரநாராயணன், மனுதாரர் ஒரு பைனான்சியர், மனுதாரர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இப்போது கூட அவர் உரிமையியல் வழக்கு தொடரலாம். அந்த உரிமைகள் பாதிக்கப்படவில்லை. தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாறாக தற்போது உரிமையியல் வழக்கு தொடர எந்த தடையும் இல்லை. குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து விட்டால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு ஆறு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details